நடிகர் தனுஷ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி 17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

துள்ளுவதோ இளமை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனவர் தனுஷ். அந்த படத்தின் ஷூட்டிங்கின்போது தன்னை பார்த்தவர்கள் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டது என்று கிண்டல் செய்ததாக தனுஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என்று பன்முகத் திறமை கொண்டவராக உள்ளார். தனுஷ் திரையுலகிற்கு வந்து 17ம் ஆண்டு நிறைவையொட்டி அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவரது புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துள்ளுவதோ இளமை திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகி விட்டது. என்னால் நம்பவே முடியவில்லை. எதுவும் தெரியாத சின்ன பையனாக இருந்த எனக்கு உங்கள் இதயத்தில் இடம் கொடுத்திருக்கிறீர்கள். நடிகனாகக்கூட முடியாது என்று நினைத்த என்னை ஒரு ஸ்டாராக மாற்றி இருக்கிறீர்கள், எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது.

என்னுடைய வெற்றி தோல்வி எல்லாவற்றிலும் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். நான் சரியான மனிதன் கிடையாது ஆனால் உங்களுடைய அளவுகடந்த அன்பு, என்னை பன்படுத்தி வளர்த்திருக்கிறது.

உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள், இந்த படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்து விட்டது என்பதை ரசிகர்களாகிய நீங்கள் வெளியிட்டிருந்த போஸ்டர்களை பார்த்து நான் இன்னும் ஊக்கம் அடைந்திருக்கிறேன். இந்த அன்பு எப்போதும் வேண்டும், அன்பை பரவச் செய்யுங்கள் அன்பு மட்டும் உலகத்தை உருவாக்கும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.