நேபாள நாட்டு இளைஞர் எனக் கூறி, நேபாளப் பிரதமரை எதிர்த்து ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கோஷமிட விஷ்வ இந்து சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கட்டாயப்படுத்தி இந்திய இளைஞர் ஒருவருக்கு ரூ.1000 வழங்கி வீடியோ வெளியிட்டது, காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அண்மையில் நேபாள பிரதமர் சர்மா ஒலி, ராமர் நேபாள நாட்டுக் கடவுள் என கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். நேபாள பிரதமரின் இந்த கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்புகள் எழுந்தது.

அதனையடுத்து, வெளியான ஒரு வீடியோவில், நேபாள நாட்டை சேர்ந்தவராகச் சித்தரிக்கப்பட்ட ஒருவரைச் சிலர் தாக்கியபடி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எனக் கூறச் சொல்லி, அவருக்கு மொட்டை அடித்து தலையில் ஜெய் ஸ்ரீராம் என எழுதி, குறிப்பிட்ட நபர் நேபாள நாட்டுப் பிரதமருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனால் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வசிக்கும் நேபாள இளைஞரை, இந்து அமைப்பினர் மொட்டை போட்டு, நேபாள இந்திய ஒலிக்கு எதிராக கோஷம் போட வைத்ததாக வீடியோ காட்சியுடன் செய்தி பரவியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் வாசிக்க: கொரோனாவுக்கு மாட்டுக் கோமியம் மருந்தா… பாஜக தலைவரின் பகீர் கருத்து

அண்டை நாடான நேபாள அரசியல் கட்சி குறித்தும், அந்நாட்டின் பிரதமர் குறித்துப் பேசிய விவகாரம் தொடர்பாக வாரணாசியில் உள்ள பேலுபூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த இளைஞர் நேபாளி அல்ல, இந்தியர் என்ற உண்மை வெளியாகியுள்ளது.

இந்த விசாரணை குறித்து பேலுபூர் போலீஸ் கூறுகையில், குறிப்பிட்ட வீடியோவில் நேபாள நாட்டுக்காரர் போல் ஒருவரைப் பொய்யாகச் சித்தரித்துள்ளனர். அவர் இந்தியர்தான். அந்த நபர் வாரணாசியில் வசித்து வருகிறார். அந்த நபரின் அண்ணன் அரசு ஊழியர். பாதிக்கப்பட்ட நபரை விஷ்வ இந்து சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கட்டாயப்படுத்தி ரூ.1000 வழங்கி அழைத்துச் சென்று வீடியோ எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.

மொட்டை அடித்து தலையில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் வீடியோவில் காண்பிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிட முடியாது என வாரணாசி போலீஸ் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.