நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்து, தனது சிறந்த நடிப்பினால் இந்திய ரசிகர்களின் மனதில் கனவுகன்னியாக இடம் பிடித்த ஸ்ரீதேவிக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி துபாயில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, குளியல் தொட்டியில் மூழ்கி உயரிழந்தார். அவரது உடலுக்கு இந்திய சினிமாவின் பல்வேறு துறை சார்ந்த கலைஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் பாலிவுட்டில் யாஷ் சோப்ரா இயக்கத்தில் ஸ்ரீதேவி நடித்த சாந்தினி, லம்ஹே போன்ற படங்கள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டன. இதனால் அந்த நாட்டிலும் அவர் புகழடைந்தார்.

ஸ்ரீதேவியை பெருமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு அவருக்கு தேசிய விருது வழங்கியது. தற்போது நடிகை ஸ்ரீதேவியின் சிலை அமைக்க சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இதை அந்நாட்டு சுற்றுல்லாத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம், சுவிட்சர்லாந்தின் சுற்றுலாதுறையும் வளர்ச்சி அடையும் என அந்நாட்டின் அரசாங்கம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன்மூலம் இந்திய சினிமா துறை படங்களை அந்நாட்டில் உருவாக்கிட நடைமுறைகளும் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.