இசையால் தான் பாடல் வரிகள் அழியாப் புகழை பெறுவதாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜா பேசியது திரையுலகில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இளையராஜா தனது 75வது பிறந்தநாள் விழாவை பல கல்லூரிகளில் தனது இசை பயணத்தை பகிர்ந்து கொண்டாடி வருகிறார். இந்நிலையில் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி அம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா தன்னுடைய அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

அதில் பேசிய இளையராஜா, “யாரையும் சார்ந்து யாரும் இருக்கக்கூடாது. யாரையும் நம்பி, தான் சென்னைக்கு வரவில்லை. கமல், ரஜினி போன்றவர்கள் இசைக்காக தன்னை தேடி வந்ததாக கூறினார்.

மேலும், தளபதி படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு செய்தி’ என்ற பாடலின் வரிகள் சாதாரணமானவை. ஆனால் அதை கவிஞர் வாலி இசையுடன் பொருந்தும் விதமாக எழுதியதால் அது காலத்தால் அழிக்க முடியாத பாடலாக மாறியது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய இளையராஜா, கண்ணதாசன் எழுதிய வரிகளை குறிப்பிட்டு, எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையால் தான் பல பாடல்கள் இன்றும் மறக்கமுடியாத பாடலாக இருக்கிறது” என்று பேசினார்.

ஏற்கனவே திரையுலகில் இயக்குநர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இளையராஜாவின் இந்த பேச்சு, திரையுலகில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இதற்கு முன்னர் தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசை நிகழ்ச்சிகளில் பாடக் கூடாது என்றும் இசை அமைத்த தனக்கே பாடல்கள் மீது உரிமை உள்ளது என்றும் கூறி இசைஞானி இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து இளையராஜா பாடல்களை பாடுவதை 1 வருடம் நிறுத்திய எஸ்.பி.பி., ‘என் பாடல்களை பாடக் கூடாது என்று இளையராஜா கூறினாலும் நான் பாடிக் கொண்டே இருப்பேன்’ என்று மீண்டும் அவரின் பாடல்களை பாடத் துவங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்பு செய்திக்கு: இளையராஜா – எஸ்.பி.பி. மோதல் முடிவுபெறுமா…