சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரது ஜாமின் மனு மறுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடப்பதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய அதிரடி சோதனையில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் 4 நாட்கள் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக் காவல் நிறைவடைந்ததயடுத்து நேற்று (7.10.2021) அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மேலும் தகவல்களை பெற வேண்டியிருப்பதால் 11 ஆம் தேதி வரை காவலை நீட்டிக்க வேண்டும் என போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலில் அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை. விசாரணைக்கு போதுமான நாட்கள் கொடுக்கப்பட்டது எனக் கூறி, ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது.

இதற்கிடையில் ஜாமீன் வழங்க கோரி ஆர்யன் கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (8.10.2021) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.