பிரதமர் மோடி பாலிவுட் நடிகர்களை சந்தித்து பேசியது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட், ரன்பிர் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், கரண் ஜோஹார், ரோஹித் ஷெட்டி, ராஜ்குமார் ராவ், ஆயுஷ்மான் குரானா, சித்தார்த் மல்ஹோத்ரா, ஏக்தா கபூர், பூமி பட்னேகர் உள்ளிட்டோர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளனர். நாட்டை மேம்படுத்துவது, சினிமாவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துள்ளனர். நடிகர் ரன்வீர் சிங்கோ மோடியை கட்டிப்பிடிப்பது போன்று புகைப்படம் எடுத்து தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன் நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமண வரவேற்பு நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதனை குறிப்பிட்டு, நம் நாட்டின் விவசாயிகளை சந்திக்க நேரமில்லாத பிரதமர் சினிமா பிரபலங்களை மட்டும் சந்திப்பதாக சமூக வலைதளங்களில் பெரிதும் சர்ச்சையானது.

ஒரு நாட்டின் பிரதமராகிய மோடி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் பல இருக்க சினிமாக்காரர்களுடன் செல்ஃபி எடுக்க நேரம் இருக்கிறதா என்றும், எனக்கு பிடித்த நடிகர் நடுவில் இருக்கிறார் என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், மோடி நல்ல நடிகர் அவரை உங்கள் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யுங்கள் என்று ஒருவர் இயக்குனர் கரண் ஜோஹாரிடம் கூறியுள்ளார். மோடியிடம் நடிப்பு கற்க சென்றதாக பாலிவுட் பிரபலங்களையும் சேர்த்து சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.