நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தி நில நிர்வாக ஆணையர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. மலையாளம் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், இங்கிலீஷ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். மேலும் இந்திய அளவில் அதிக ரசிகர்களை வைத்துள்ள நடிகர்களில் முக்கியமானவர் மம்முட்டி.

தமிழக ரசிகர்களால் நன்கு அறியப்படும் நடிகரான மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழிபள்ளம் என்ற கிராமத்தில் 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கருவேலி புறம்போக்கு (காப்பு காடு) என்று வகைப்படுத்தி கடந்த மார்ச் மாதம் நில நிர்வாக ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில் கடந்த 2007 ஆம் ஆண்டு தனியார் நிலம் என்று வகைபடுத்தப்பட்ட இந்த நிலத்தை தற்போது கழுவேலி புறம்போக்கு என்று மறுவகைப்படுத்தி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த நிலம் தொடர்பாக கடுமையாக நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது என்று இடைக்கால உத்தவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் 21.12.2021 மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தங்கள் தரப்பில் விளக்கத்தை கேட்காமல் நிலத்தை மறுவகைப்படுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நடிகர் மம்முட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிப,தி 40 ஏக்கர் நிலத்தை கழுவேலி புறம்போக்கு என்று அறிவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் நில நிர்வாக ஆணையர், மம்முட்டி தரப்பில் விளக்கம் கேட்டு 12 வாரங்களுக்குள் புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.