காஷ்மீர் விவகாரம், இந்திய ராணுவம், அயோத்தி ராமர் கோவில் உள்பட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து இணையத்தில் பொய் செய்திகளைப் பரப்பியதாக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்கி ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தானில் நயா பாகிஸ்தான் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்று செயல்பட்டு வருகிறது. 20 லட்சம் பின் தொடர்பவர்களுடன் செயல்படும் அந்த யூடியூப் சேனல் பாகிஸ்தானின் உள்நாட்டு உளவுத்துறை உதவியுடன் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து பொய் செய்திகளை பதிவிட்டு வருகிறது.

காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் போராட்டம், அயோத்தியா உள்பட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து பொய்யான தகவல்களை பதிவிட்டு வருவதால் அந்த சேனலை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா, யூடியூப் நிர்வாகம் மற்றும் தொலை தொடர்புத்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதனையடுத்து நயா பாகிஸ்தான் யூடியூப் சேனல் முடக்கப்பட்டது. இதேபோல் பாகிஸ்தானில் இருந்து இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடுக்கு எதிராக செயல்பட்டு வரும் மேலும் 19 யூடியூப் சேனல்களும் மற்றும் 2 இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, தகவல் தொழில்நுட்ப சட்ட வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகளின் கீழ் அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கூறுகையில், “உளவு அமைப்புகள் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக, இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் இணையத்தில் பொய் செய்திகளைப் பரப்பியதற்காக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்க அமைச்சகம் உத்தரவிட்டது.

இரண்டு தனித்தனி உத்தரவுகளின் வாயிலாக, இந்த யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களை முடக்க இணையச் சேவை வழங்குநர்களை அறிவுறுத்துமாறு தொலைத்தொடர்புத் துறையை அமைச்சகம் கோரியுள்ளது.

மேற்கண்ட சேனல்கள் மற்றும் இணையதளங்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தவறான தகவல் வலையமைப்பைச் சேர்ந்தவையாகும். இந்தியா தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்களைப் பற்றிய போலிச் செய்திகளை இவை பரப்புகின்றன.

காஷ்மீர், இந்திய ராணுவம், இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள், ராமர் கோவில், ஜெனரல் பிபின் ராவத் போன்ற தலைப்புகளில் பிளவுபடுத்தும் உள்ளடக்கத்தை வெளியிட இந்த சேனல்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் ஒரு சேனல் தமிழ் புலிகள் குறித்த காணொலி ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

நயா பாகிஸ்தான் குழுமத்துடன் தொடர்புடைய மற்றும் தனித்து செயல்படும் இந்த சேனல்களின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 35 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இவற்றின் காணொலிகள் 55 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளன” என்று தெரிவித்துள்ளது.