பட்டியலின சமூகத்தை குறிப்பிட்டு இழிவாக விமர்சித்து பேட்டி அளித்த நடிகை மீரா மிதுன் மீது சென்னை சைபர் கிரைம் பிரிவு காவல்துறை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிக்பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமானவர் மீரா மிதுன். இவர் தன்னை பிரபலமாகக் காட்டிக் கொள்வதற்கான நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து தனது சமூக வலைதளத்தில் சர்ச்சையாகப் பேசுவதை வழக்கமாக வைத்து வருகிறார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இயக்குநர்களைத் தரக்குறைவாகப் பேசி சமீபத்தில் மீரா மிதுன் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையை விட்டே வெளியேற வேண்டும் என பேசியுள்ளார்.

மீரா மிதுனின் இந்தப் பேச்சுக்குப் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், “மீரா மிதுன் என்ற திரைப்பட நடிகை தாழ்த்தப்பட்ட சமூகத்தையே மிக கேவலமாகவும் மோசமான வார்த்தைகளாலும் திட்டியது மட்டுமல்லாமல் திரைப்பட துறையில் இருந்தே தாழ்த்தப்பட்ட சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.

இது பொதுவாக தாழ்த்தப்பட்டோரை கேவலப்படுத்தும் ஆதிக்க சாதியினரின் தூண்டுதல் பேரில் அதே மன நிலையை பிரதிபலிக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களை கேவலமாக பேசி வீடியோ பதிவிட்ட மீரா மிதுன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 32/2021 U/s 153,153A(1) (a),505 (1) (b),505 (2) IPC and section 3(1) (r),3(1)(s), (3)(1) (u) of sc &ST Prevention Act 1989-ன் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘வாழு, வாழவிடு’- நடிகர் அஜித் வெளியிட்ட ஸ்பெஷல் மெசேஜ்