உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்குக்கு சொந்தமான, மின்சார வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக் எல்லுசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

கார் அதன் பாதையில் ஒட்டிச் செல்வது, வேகமெடுப்பது, நிறுத்துவது ஆகியவற்றை அதுவாகவே செய்யும் தானியங்கித் தொழில்நுட்பம் ‘ஆட்டோ பைலட்’ என்று அழைக்கப்படுகிறது. ஆட்டோ பைலட் தொழில்நுட்பம் குறித்து ஆராயும் ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக் எல்லுசுவாமியை அந்நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

சமூக ஊடகங்கள் வாயிலாக பணியாளர்களை நியமனம் செய்துவரும் டெஸ்லா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் இதனை அறிவித்துள்ளார்.

டிவிட்டரில் தன்னுடைய காணொலி பேட்டி ஒன்றுக்கு பதில் அளித்திருந்த எலான் மஸ்க், “டெஸ்லா நிறுவனம் ஆட்டோ பைலட் குழுவை தொடங்குவதாக நான் ட்வீட் செய்திருந்தேன். அந்த ட்வீட் மூலம் முதன்முதலில் ஆட்டோ பைலட் குழுவில் தேர்வு செய்யப்பட்டது அசோக் தான்” என தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த எல்லுசுவாமி என்பவரின் மகன் அசோக். இவரது தந்தை எல்லுசுவாமி, மெட்ராஸ் உர நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொடர்பியல் பிரிவில் 2009 ஆம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றார்.

பின்னர், அமெரிக்காவில் கார்னேஜி மெல்லோன் பல்கலைக்கழகத்தில் ரோபோட்டிக் சிஸ்டம் டெவலப்மெண்ட் பிரிவில் எம்.எஸ். பட்டம் பெற்றார். டெஸ்லா நிறுவனத்தில் சேருவதற்கு முன்னர், ஃபோக்ஸ்வாகன் எலெக்ட்ரானிக் ஆய்வுக்கூடம் மற்றும் வாப்கோ (WABCO) வாகன கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.

பின்னர், 2014 முதல் தற்போது வரை 8 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்நிறுவனத்தின் ஆட்டோபைலட் பிரிவில், 2014-ல் மென் பொறியாளராக பணியைத் தொடங்கிய அவர், 2016-ல் மூத்த மென் பொறியாளர்,.

2017-ல் சீனியர் ஸ்டாப் மென்பொறியாளர், 2019-ல் ஆட்டோபைலட் சாப்ட்வேர் குழுவின் இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து, படிப்படியாக உயர்ந்து தற்போது, அந்நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.