டிசம்பர் 1-ம் தேதி பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 7 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மத்திய மாநில அரசுகள் அளித்துள்ள பல தளர்வுகள் காரணமாக, பல தனியார் மற்றும் அரசு கல்லூரிகள், மாணவர் சேர்க்கையை நடத்தி, ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு, கல்லூரிகள் தொடங்கி வகுப்புகள் நடைபெறுவதற்கான கால அட்டவணையைக் கடந்த மாதம் வெளியிட்டது. இதுவரை 4 முறை பல்வேறு திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பொறியியல் படிப்புப்பான இறுதிக்கட்ட கலந்தாய்வை நவம்பர் 15ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவித்திருந்தது.

தற்போது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (ஏஐசிடிஇ), 2020-21 ஆம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகளைத் தொடங்குவதற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இளங்கலை முதலாம் ஆண்டு மற்றும் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேரும் டிப்ளமோ மாணவர்களுக்கான சேர்க்கை பணிகள் அனைத்தும் நவம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

டிசம்பர் 1-ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: இந்திய இராணுவப் பள்ளியில் வேலைவாய்ப்பு