சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
 
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது பொன்.மாணிக்கவேலுக்கு தரப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசின் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
 
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் 3-வது முறையாக அவகாசம் கேட்பது ஏற்புடையது அல்ல என்றனர்.
 
இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்த நீதிபதிகள் இதற்காக தலைமைசெயலர் கிரிஜா, மற்றும் டிஜிபி ராஜேந்திரன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
 
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமித்த 104 காவலர்களில் 26 பேர் பணியில் சேர்ந்துள்ளதாகவும், சிலை கடத்தல் தொடர்பாக 174 வழக்கு ஆவணங்களை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரிக்கு செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கெடு விதித்தனர்.
 
இதே போன்று சிலைகளை பதுக்கி வைத்த வழக்கில் முன் ஜாமீன் பெற்ற கிரண்ராவ் மும்பை செல்ல அனுமதித்த நீதிபதிகள், உரிய நேரத்தில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் ஆஜராகாவிட்டால் சொத்துகள் சீல் வைக்க உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.