திமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து விவசாயிகளின் விவசாயக் கடன்கள், நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழர் திருநாளில் அனைவருக்கும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

உலகின் அச்சாணியான உழவுத் தொழிலைப் போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் நன்னாளும், திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கின் தொடக்கமுமான தமிழ்ப் புத்தாண்டும் இணைந்து வரும் தை-1 தமிழர் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைப்பின் சிறப்பையும், அதற்குப் பேருதவியாக இருக்கும் இயற்கையையும், மனிதர்களுக்கு உறுதுணையாக உள்ள உயிரினங்களையும், நன்றியுடன் போற்றுகிற நாளே பொங்கல் நன்னாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கைக்கு ஏற்ப, அனைத்துத் தரப்பு மக்களின் மகிழ்ச்சிக்கான ஜனநாயக விடியலைத் தரும் உதயசூரியன் விரைவில் உதிக்கும்.

விவசாயிகளின் வாழ்வு செழித்திடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் விவசாயக் கடன், நகைக் கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என்ற உறுதியினை வழங்குகிறேன். அதுபோலவே மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுமையாக உள்ள கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படும். இவற்றுக்கான பொறுப்பை திமுக அரசு ஏற்கும்.

தமிழ் மக்கள் வாழ்வில் இருள் அகன்று, வளமும் நலமும் வெளிச்சம் பாய்ச்சிடத் தமிழர் திருநாளை வரவேற்று அனைவருக்கும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் சட்ட நகல்களை எரித்து போகி கொண்டாட்டம்- தமிழக விவசாயிகள்