மன்மதன், வல்லவன் படத்தின் ரீமேக் உரிமை விவகாரம் குறித்து டி.ராஜேந்தர் நேற்று புகார் அளித்த நிலையில், சிம்பு ஏற்படுத்திய நஷ்டத்தில் இருந்து மீள முடியவில்லை என்று தயாரிப்பாளர் தேனப்பன் புகார் கூறியுள்ளார்.

நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் “என் மகன் சிம்பு நடித்த மன்மதன், வல்லவன் ஆகிய 2 படங்களின் டப்பிங், ரீமேக் உரிமையும் என்னிடம் உள்ளது. ஆனால் அதை விற்க தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் முட்டுக்கட்டை போடுகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் டி.ராஜேந்தரின் குற்றச்சாட்டுக்கு தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனது நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான வல்லவன் படம் 2006ம் ஆண்டு வெளியானது. அதன் இந்தி மற்றும் வட இந்திய உரிமம் என்னிடமே இருந்தது. அதன்பிறகு 2016ம் ஆண்டு அந்த உரிமத்தை எஸ்.என்.மீடியா என்ற நிறுவனத்திற்கு முறைப்படி விற்பனை செய்துள்ளேன். இந்த நிலையில் சிம்புவின் தந்தையாகிய டி.ராஜேந்தர் உரிமம் தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார்.

நான், வல்லவன் படத்தை தயாரித்து, சிம்புவை இயக்குனராக அறிமுகப்படுத்தினேன். அவரது ஒத்துழையாமையால் படத்தின் பட்ஜெட், பல மடங்கு அதிகமாகி, அதனால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து இன்றளவும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். என்னை போன்று பல தயாரிப்பாளர்கள் சிம்புவால் எல்லாவற்றையும் இழந்து நிற்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் என்னைப் பற்றி தவறாக பேசிய டி.ராஜேந்தரை வன்மையாக கண்டிக்கிறேன். என் பெயருக்கு களங்கம் விளைவித்தற்காக அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து புகார் அளிக்க இருக்கிறேன்” என்று தேனப்பன் கூறியுள்ளார்.