கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வரும் 2020-21 கல்வியாண்டை ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் தொடங்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுதலைக் கட்டுபடுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, மே 3 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற இருந்த பொதுத் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் கல்வியாண்டு தொடங்கும். ஆனால், இந்தாண்டு கொரோனா வைரஸ் காரணமாக, 2019-20ம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள், செமஸ்டர் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. அவை அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் அவை மேலும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

மேலும் வாசிக்க: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த கோரிக்கை

இதனிடையே கல்லூரிகள் திறப்பு, தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 7 பேர் கொண்ட 2 கமிட்டிகளை பல்கலைக்கழக மானியக் குழு உருவாக்கியது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வரும் கல்வியாண்டிற்கான நெறிமுறைகள், பல்கலைக்கழக தேர்வுகள் கட்டமைப்பு உருவாக்கப்படும். தற்போது யுஜிசி.,யின் பரிந்துரையில், வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை ஜூலை மாதத்துக்கு பதில் செப்டம்பரில் தொடங்கலாம், நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஜூன் மாதத்தில் நடத்தலாம் என்று என்று ஒரு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்டுள்ள செமஸ்டர் தேர்வுகளை உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் ஆன்லைனிலேயே நடத்திக் கொள்ளலாம் என்றும், இல்லாவிட்டால் ஊரடங்கு முடிந்த உடன், சூழலைப் பொறுத்து நேரடி எழுத்துத் தேர்வாக நடத்தலாம் என்றும் மற்றொரு கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய அறிவிக்கையை 10 நாட்களில் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.