PSBB ஆசிரியர் ராஜகோபாலனிடம் நடைபெறும் விசாரணையில் ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள், ஆதாரங்கள் வெளியாகிவரும் நிலையில், ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.

பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக ராஜகோபாலன் வரதாச்சாரி என்ற ஆசிரியர் கடந்த வாரம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

ராஜகோபாலனிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகமும் செயல்பட்டது தெரியவந்துள்ளது. ராஜகோபாலனுக்கு எதிராக புகார் வைக்கப்பட்ட நேரங்களில் PSBB பள்ளி நிர்வாகம் அவரை நீக்கவில்லை, அவரை அழைத்து விசாரணை கூட நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் பள்ளி நிர்வாகிகளிடம் கடும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பள்ளியின் ஆசிரியர் கீதாவிடம் காவல்துறையினர் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர். மேலும் சில ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை கொடுத்த உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு இதுவரை 50க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இதில் மாணவிகள் சிலர் அளித்த புகாரில் அதிர்ச்சி அளிக்கும் பல தகவல்களை குறிப்பிட்டுள்ளனர்.

அதில், பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் சிலர் மாணவிகளை விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ் என்று அழைத்து, அவர்களிடம் அத்துமீறும் செயலில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். அதோடு மாணவிகளிடம் உங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன். எங்களுக்கு நிறைய தொடர்பு உள்ளது.

எங்களின் தொடர்புகளை வைத்து உங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறோம் என்று கூறி மாணவிகளை சில ஆசிரியர்கள் வற்புறுத்தியதாக காவல்துறையிடம் மாணவிகள் தெரிவித்துள்ளனர். இந்த புகாரில் பல ஆசிரியர்களின் பெயர்கள் அடிபடுவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், PSBB ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். ஏற்கனவே ராஜகோபாலன் இல்லாமல் மேலும் மூன்று ஆசிரியர்கள் பாலியல் புகாரில் சிக்கி உள்ளது தெரியவந்துள்ளது.

அவர்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்களும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் பத்மா சேஷாத்ரி பள்ளி பாலியல் புகார் விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

5 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது