தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை வரும் 13ம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைப்பார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் தேர்வுகள் மற்றும் வகுப்புகள் தடைபட்டுள்ளன. எனவே தனியார் பள்ளிகள், ஆன்லைன் வழியில் வகுப்புகள் எடுக்க துவங்கியுள்ளன.

பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க மாணவர்களிடம் கட்டணம் பெறுவது அவசியம் என்பதால், ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்கு தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தமிழக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மத்திய அரசு விரைவில் ஆன்லைன் வகுப்புகளுக்கான, வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவிக்க உள்ளது. இந்த வருடம் முழுக்க பள்ளி, கல்லூரிகளை திறப்பது சாத்தியமில்லாதது எனக் கூறப்படும் நிலையில், கல்வி நிறுவனங்களும், மத்திய அரசும், ஆன்லைன் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை வரும் 13ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இணையத்தையும் மொபைலையும் மட்டுமே சார்ந்த இந்த கல்விமுறை என்பது 100% பெருநகரங்களுக்கு மட்டுமே சாத்தியமானது. அதிகப்படியாக ஏழை மாணவர்கள், தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் இல்லாத கிராமப் புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை ஆன்லைன் வகுப்புகள் எப்படி சென்று சேரும் என்பது மிகப்பெரிய சவால் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பல்வேறு கல்வி சார்ந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பிறகு வாபஸ் பெறப்பட்டன. தமிழக அரசிலேயே சமீபத்தில் அதிக முடிவுகளை வாபஸ் பெற்றது கல்வித்துறைதான். எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் முடிவில் அரசின் நிலைப்பாடு உறுதியானதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

மேலும் வாசிக்க: பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தமிழக அரசு விதித்த தடை நிரந்தரமா..