மகளிர் இலவச பயணத்திற்கான பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் பிங்க் வண்ணத்திலான பேருந்துகள் சேவையை தமிழக அரசு தொடங்கி வைத்துள்ளது.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றி, தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மகளிருக்கு இலவச பேருந்து சேவை வழங்கி வருகிறது. இத்திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மாநகரங்களில் வெள்ளை போர்டு அல்லது சாதாரண கட்டணம் என்று ஒட்டப்பட்ட பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம். சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 1,559 பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது 10.50 லட்சம் பேர் இலவசமாக பயணித்து வருகின்றனர். சென்னையில் ஓடக்கூடிய மொத்த மாநகர பேருந்துகளில் 50 சதவீத பேருந்துகள் மகளிர் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் பெண்களை ஏற்றி இறக்க வேண்டும் என ஓட்டுநர், நடத்தினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அனைத்து பேருந்துகளும் ஒரே நிறத்தில் இருப்பதால், பெண்கள் அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், பெண் பயணிகள் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அந்த பேருந்தின் முன்பக்கமும், பின்பக்கமும் பிங்க் நிறத்தில் மாற்றப்படுகின்றன.

சென்னையில் முதற்கட்டமாக 60 பேருந்துகள் பிங்க் நிறத்தில் மாற்றப்பட்டு உள்ளன. இந்த பேருந்துகள் இன்று (6.08.2022) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. பிங்க் நிற பேருந்துகள் சேவையை அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மதன்மோகன், மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.