இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும் படி, இந்தியன் ரெக்கார்டு கம்பெனி உள்ளிட்ட இரு மியூசிக் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து, 1978 -80களில் வெளியான, 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு, 3 கன்னட, 2 மலையாளம் என மொத்தம் 30 படங்களின் இசை பணிகளை, பட தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றுள்ளதால், இந்த படங்களின் இசையை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை கோரி இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனம் (INRECO) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த 30 படங்களின் இசை இந்தியன் ரெக்கார்டு கம்பெனிக்கு சொந்தமானவை என கூறி, அவற்றை பயன்படுத்த இளையராஜா மற்றும் இரு மியூசிக் நிறுவனங்களுக்கு தடை விதித்து கடந்த 2020 பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் தியாகராஜன் மற்றும் சரவணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த மனுவில், பட தயாரிப்பாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி கம்பெனிக்கு சாதகமான உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும்,

பட தயாரிப்பாளர்களுக்கு படத்தின் காப்புரிமை மட்டுமே உள்ளதாகவும், இசை பணிகளுக்கு அவர்கள் முதல் உரிமையாளர்கள் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் வர்த்தகம் சம்பந்தப்பட்டது என்பதால் அது சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு தான் விசாரிக்க வேண்டும் எனவும், தனி நீதிபதியின் உத்தரவு அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் இளையராஜா தரப்பில் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவைஉயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,1980 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் காலாவதியான பிறகும் தனது பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும் இதற்கு உரிய காப்புரிமை பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் 1996க்கு பிறகுதான் டிஜிட்டல் உரிமை குறித்து பேசப்பட்டு, 2012 புது சட்ட திருத்தங்கள் வந்ததாகவும், தனி நீதிபதி, டிஜிட்டல் உரிமை குறித்த சட்ட திருத்தந்தை கருத்தில் கொள்ளவில்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

மனுதரார் தரப்பு வாதங்களுக்கு பிறகு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க இந்தியன் ரெக்கார்டு கம்பெனி உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை தள்ளிவைத்தனர்.