தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானதைத் தொடர்ந்து படக்குழுவினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் தர்பார். இதில் ரஜினியுடன் இணைந்து யோகி பாபு, நிவேதா தாமஸ், பிரதீக் பாப்பர் ஆகியோர் நடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 3 மாதம் மும்பையை சுற்றிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

கடந்த 10ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வரும் 2020 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. தொடர்ந்து மருத்துவமனை காட்சி, கிரிக்கெட் விளையாடுவது போன்றவை சமூக வலைதளங்களில் வெளியானது. இது தயாரிப்பு தரப்பினருக்கும், இயக்குனருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தடுக்கும் வகையில், இது குறித்து ஆலோசனை நடத்திய படக்குழுவினர் பார்வையாளர்களுக்கு தடை விதித்துள்ளனர். மேலும், படப்பிடிப்பு நடக்கும் இடத்தை சுற்றிலும் தனியார் பாதுகாவலர்களை நிறுத்தியுள்ளனர். அருகிலுள்ள காவல் நிலையத்தில் மனு அளித்து அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பையும் பெற்றுள்ளனர். படத்தில் நடிக்கும் துணை நடிகர், நடிகைகளுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர்.

இதன் காரணமாக கடந்த சில தினங்களாக தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.