உத்தரப்பிரதேசத்தில் கழுதை சாணத்தைக் கொண்டு போலி மசாலாக்கள் தயாரித்து விற்பனை செய்த இந்து அமைப்பு தலைவரின் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்..

உத்தரப்பிரதேசம் ஹத்ரா நகரில் உள்ள நவிப்பூர் பகுதியில் மசாலா தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் அனூப் வர்ஷனேய் என்பவர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகியால் கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யுவ் வாகினி என்னும் இந்து அமைப்பின் உ.பி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அனூப் வர்ஷனேய் நடத்தும் மசாலா தயாரிக்கும் தொழிற்சாலையில் மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா என அனைத்து மசாலாக்களும் அரைத்து பாக்கெட்டில் அடைக்கப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் இந்த மசாலாக்கள் போலியானவை எனவும் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை எனவும் பல ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த மசாலாக்கள் விற்பனையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்தடுத்து எழுந்த புகாரின் பேரில், மசாலா தொழிற்சாலையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது உள்ளூர் மசாலா நிறுவனப் பெயர்களில் மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா உள்ளிட்ட சுமார் 300 மசாலா பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த மசாலா பொருட்களை சோதனை செய்ததில், இவை அனைத்தும் கழுதை சாணம், வைக்கோல் மற்றும் தரக்குறைவான சாயம் ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்டவை. இந்த மசாலா பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால் உடல்நலக் கேடு உண்டாகும் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த தொழிற்சாலை உரிமம் இல்லாமல் நடத்தப்பட்டு வந்துள்ளது. இங்கு தயாரிக்கும் பொருட்களும் உரிமம் பெறாதவை என உறுதியாகி உள்ளது. இதனையடுத்து மசாலா தொழிற்சாலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தொழிற்சாலை உரிமையாளர் அனூப் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாடகை பிரச்சனையில் லதா ரஜினிக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை