ஓஎன்வி (ONV) இலக்கிய விருதைத் திருப்பித் தருவதாகவும், அந்த பரிசுத்தொகை 3 லட்ச ரூபாயுடன் கூடுதலாக 2 லட்சம் சேர்த்து, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்துவுக்கு கேரளாவின் உயரிய விருதாக கருதப்படும் ஓஎன்வி இலக்கிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதுக்கு மலையாள நடிகை பார்வதி மற்றும் பாடகி சின்மயி உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, ஓஎன்வி விருதினை கொடுப்பது குறித்து பரிசீலனை செய்யப்போவதாக ஓஎன்வி விருது குழு அறிவித்தது. இது மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓஎன்வி கல்சுரல் அகாடமி அறிவித்தது. நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன்.

ஆனால் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓஎன்வி குரூப்பையும் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன்.

அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்.

ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்; அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.

ஓஎன்வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓஎன்வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

மலையாள மண் மீதும் மக்கள் மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத் தொகையாக ரூபாய் 2 லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன். தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும்.

இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும். ஊடக உறவுகளுக்கும் என் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை குறித்து பேசியது தவறு: எச்.ராஜா திடீர் பல்டி