‘எந்திரன்’ பட கதை விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’. இந்தப் படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடான் கூறிவந்தார்.

இந்நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடான் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து இயக்குநர் ஷங்கர் இயக்கிய படம் எந்திரன். இந்தப் படத்தின் கதை என்னுடையது. கடந்த 1996 – ஆம் ஆண்டு உதயம் என்ற பத்திரிகையில் ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் தொடர்கதை எழுதினேன். அந்தக் கதையை எனது அனுமதியை பெறாமல் இயக்குநர் ஷங்கர் எந்திரன் படமாக எடுத்துள்ளார். எனவே, இதற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “இயக்குநர் ஷங்கரை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகவும், அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் குறுக்கு விசாரணை செய்யவும் , இந்த விசாரணை அனைத்தையும் ஆகஸ்ட் 8 -ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது ஷங்கர் புதிய மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். அதில், “என்னுடைய ‘எந்திரன்’ படத்துக்கும், மனுதாரரின் கதைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. மேலும் எனது கதையில் பல்வேறு மாற்றங்கள் உள்ளன. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் எந்திரன் திரைப்படத்தின் கதையை முத்திரையிடப்பட்ட உறையில் பதிவு செய்திருந்தேன். இந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என கோரியுள்ளார். இதனால் இயக்குனர் ஷங்கரின் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.