உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் தேர்தல் 80 சதவீதம் பேருக்கும், 20 சதவீதம் பேருக்கும் இடையிலான தேர்தலாக இருக்கும், இதில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி 8.1.2022 அன்று அறிவிக்கப்பட்டது. நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மார்ச் 3 மற்றும் மார்ச் 7 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அறிவிக்கை ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும். வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 21. 24 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 27 ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இதேபோன்று ஒவ்வொரு கட்டங்களுக்கும் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. பரிசீலனைக்கு பின்னர் மனுக்களை திரும்பப் பெற 3 நாட்கள் அளிக்கப்படுகிறது.

உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய 4 கட்சிகளிடையே 4 முனை போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் முன், தூர்தர்ஷன் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் சட்டப்பேரைவத் தேர்தல் என்பது 80 சதவீதத்துக்கும், 20 சதவீதத்துக்கும் இடையிலான தேர்தல்.

80 சதவீத ஆதரவாளர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள், 20 சதவீதம் பேர் மற்றொருபுறம் இருக்கிறார்க்ள். 80 சதவீதம் பேர் சாதகமான மனநிலையுடன் முன்னோக்கி நகர்வார்கள், 20 சதவீதம் பேர் எதிர்மனநிலையுடன் தொடர்ந்து எதிர்க்கிறார்கள். இதில் பாஜக தான் வெல்லும், மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும்” எனக் .கூறியுள்ளார்.

யோகி ஆதித்யநாத்தின் இந்த கருத்துக்கு சமாஜ்வாதிக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமாஜ்வாதிக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறுகையில், “80 சதவீதம், 20 சதவீதம் என்று ஆதித்யநாத் பேசியது என்பது ஏதோ வகுப்புவாத நிறத்தை பூசுவது போலாகும், இதை மக்கள் கருத்தில்கொள்ள மாட்டார்கள்.

தேர்தலில் இந்து, முஸ்லிம் எனும் பேச்சுக்கே இடமில்லை. ஜனநாயகத்தைக் காக்க மக்கள் வாக்களிப்பார்கள்
பாஜக தேர்தலில் வாங்கப்போகும் வாக்கு சதவீதத்தை முதல்வர் ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார். அதாவது பாஜக 20 சதவீதமும், மற்ற கட்சிகள் 80 சதவீதம் வாக்குகள் வாங்குவதைத் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக பாஜக செய்த தவறுகளை மக்கள் நினைவில் வைத்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் எல் பூனியா கூறுகையில், “வகுப்புவாதம், பிரிவினைவாதத்தை வைத்துதான் பாஜக எப்போதும் அரசியல் செய்கிறது. வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யவி்ல்லை. ஆனால், 80 சதவீதம் மற்றும் 20 சதவீதம் பற்றியும் பேசுகிறார்கள். முதல்வர் பேசியது தோல்வியை ஒப்புக்கொண்டது போல் இருக்கிறது. இந்து, முஸ்லிம் விவகாரத்தை பாஜக எழுப்புகிறது அதற்கு பலன் கிடைக்காது” எனத் தெரிவித்தார்.