சமீப நாட்களாக சென்னையில் தினமும் 1000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டு, புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

இந்த சூழலில் சென்னையைத் தமிழ்நாட்டிலிருந்து தனிமைப்படுத்த திட்டமிட்டு, அது தொடர்பான ஆலோசனைகளை மாநகராட்சி அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான ஆலோசனைகள் ஒருபுறம் நடந்து வரும் சூழலில் இப்போதைய நேரத்தில் அதிகளவில் போலீஸ், சுகாதாரத் துறை அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதால், மக்களைக் கட்டுப்படுத்துவதில் சில சிரமங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும் சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உள்ள வழிகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாகத் திட்டம் தீட்டி வருகின்றனர்.

மாநிலத்தில் கொரோனா தாக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கையில் அதிகம்பேர் சென்னைவாசிகள். இப்போதைய நேரத்தில் சென்னையிலிருந்து வேறு மாவட்டங்கள் செல்லும் பலருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் வாசிக்க: கொரோனா குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை- அமைச்சர் விஜயபாஸ்கர்

இதன் காரணமாகச் சென்னை, சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களை முழுவதும் தனிமைப்படுத்தி மக்கள் உள்ளே வருவதையும்,வேறு மாவட்டங்களுக்குச் செல்வதையும் தடுத்து நிறுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்த அதிகாரிகள் முன் வந்துள்ளனர்.

இதன் காரணமாகச் சரியான காரணம் எதுவுமின்றி யாருக்கும் இ-பாஸ் வழங்க வேண்டாம் எனச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரசு அறிவுறுத்தியுள்ளது.

அவசர காரியங்களைத் தவிர்த்து எதற்காகவும் சென்னைக்குள் வர யாரையும் அனுமதிக்க வேண்டாம் என பாஸ் வழங்கும் அதிகாரிகளுக்கும், மாவட்ட எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசுக்கும் உத்தரவு சென்றுள்ளது.

இதனிடையே, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பத்திரப்பதிவு டோக்கன்களையும், பதிவு செய்யப்போகும் ஆவணத்தையும் இ-பாஸ் ஆக பயன்படுத்தலாம். மாவட்டத்தை விட்டு வெளியேறும்போது பத்திரப்பதிவு ஆவணத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.