சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரியர் முறைப்படி , குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி அடையாதோர்களுக்கான தேர்வு, அடுத்த செமஸ்டரில் தேர்வினை எழுதலாம் என இருந்தது.
 
2017-ம் ஆண்டில் இருந்து அம்முறை மாற்றப்பட்டு , கிரெடிட் முறை அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.இதனால் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி வீதம் குறைகிறது எனவும், விடைத்தாள் திருத்தம் செய்யும் முறை கடுமையாக்கப்பட்டிருப்பதால் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
 
மேலும் இதனால் ஓராண்டு காலம் வீண் ஆகிறது எனவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன் திரண்ட மாணவ, மாணவிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
குறிப்பாக கிரெடிட் முறையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என்றும் பதிவாளர் மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.
 
எனினும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாணவர்களிடம் பல்கலைக்கழக பதிவாளர் குமார் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
அப்போது, மாணவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக மனுவை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்வு விதிகளில் செய்யப்பட்ட மாற்றம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
 
‘அரியர் தேர்வு விதிகளில் செய்த மாற்றத்தை மாணவர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. பல்கலைக்கழக இணைய தளத்தில் இதனை தெரிந்துகொள்ளலாம். தனி குழு அமைத்து மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார்.