உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே துறையான இந்திய ரயில்வே, பயணிகள் ரயில்களை இயக்குவதில் தனியாருக்கு வாய்ப்பளிக்க அனுமதித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து ‘ஏழைகளின் உயிர்நாடியை பறிக்கிறீர்கள், மக்கள் பதிலடி கொடுப்பார்கள்’ என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியாருக்கு வாய்ப்பளிக்கும் விதமாக விருப்பமுள்ள நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரும் முதல் கட்டப்பணியை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் 35 ஆண்டுகளுக்கு தனியார் துறை ரயில்களை இயக்கலாம். 109 ஜோடி தடத்தில் 151 நவீன தொழில்நுட்ப ரயில்களை தனியார் இயக்க ரயில்வே அனுமதியளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன், ரயில்வே துறையில் ரயில்களை இயக்குவதற்காக அதானி போர்ட்ஸ், ஆர்.கே.கேட்டரிங், மேக் மை ட்ரிப், இண்டிகோ ஏர்லைன்ஸ், விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன.

இது தவிர சர்வதேச நிறுவனங்களான அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட், பாம்பாரிடார், சீமன்ஸ் ஏஜி, மெக்குவாரி ஆகிய நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரயில்கள் இயக்கத்தை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், “ரயில்கள் மட்டும்தான் ஏழைகளின் உயிர்நாடியாக இருப்பவை. அதையும் அவர்களிடம் இருந்து மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது.

உங்களுக்கு என்ன தேவையோ அனைத்தையும் பறித்துக்கொள்ளுங்கள். ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த தேசத்தின் மக்கள் உங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க: பீகாரில் ஒரே ஒரு திருமணம்; மணமகன் பலி, 100 பேர் பாதிப்பு