ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை அதிகாரி மீது பணியிடமாற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, பாஜக உறுப்பினர் கடிதம் எழுதியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்துத்துவ தேசியவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய சுயம் சேவாக்) அமைப்பு 1925 ஆம் ஆண்டு விஜயதசமி அன்று தோற்றுவிக்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜயதசமியன்று நாளான இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இந்நிகழ்வை நடத்த காவல்துறை கண்காணிப்பாளர் எம்.செல்வராஜ் என்பவரிடம் அனுமதி கோரப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்ததையடுத்து, இந்த அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில், பாஜகவின் யுவ மோர்ச்சா பிரிவு செயற்குழு உறுப்பினரான, ராமேஸ்வரத்தை சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் அனுமதி மறுத்த காவல்துறை அதிகாரி மீது பணியிடமாற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

ஒரு மதவாத அமைப்பின் பேரணி மறுக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சரிடம் நேரடியாக ஒருவர் கடிதம் எழுதுவது மாற்றுக் கருத்துள்ளவர்களை அச்சுறுத்தும் மதவாத நடவடிக்கையாகவே பார்க்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.