இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியது தொடர்பான புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என ஜெ.ஜெ கட்சியின் நிறுவனர் ஜோசப் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எம்.பி.யும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெ.ஜெ. என்ற கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும், ஆ.ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்திய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ஆ.ராசா மீதான புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். எனவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ஜோசப்பின் புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என அறிக்கை அளித்ததாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.