5 வயது பெண் குழந்தையை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கிய குஜராத் போக்சோ நீதிமன்ற நீதிபதியை நோக்கி குற்றவாளி செருப்புகளை கழற்றி தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த ஏப்ரல் மாதம், புலம்பெயர்ந்த தொழிலாளியின் 5 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது 27 வயதான சுஜித் சாகெத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சூரத் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

விசாரணையில், தனியாக இருந்த சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறிய அந்த வாலிபர், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன் கழுத்தை நெரித்து கொலை செய்தது நிரூபிக்கப்பட்டது.

இதனையடுத்து இவ்வழக்கில் இன்று (29.12.2021) தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி.எஸ்.கலா, 26 சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மற்றும் 53 ஆதாரங்களை கருத்தில்கொண்டு சுஜித் சாகெத்திற்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பைக் கேட்டு ஆத்திரமடைந்த குற்றவாளி, தனது செருப்புகளை கழற்றி நீதிபதியை நோக்கி வீசினார். ஆனால் அந்த செருப்புகள் நீதிபதி மீது விழாமல், பக்கவாட்டில் விழுந்துள்ளன. இச்சம்பவத்தால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குற்றவாளியை காவல்துறையினர் பிடித்து சிறைக்கு அழைத்துச் சென்றனர்.