பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் பியூன், வாட்ச்மேன் வேலைக்கு 11,000 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகராட்சியில் பியூன், ஓட்டுநர் மற்றும் காவலர் ஆகிய பணிகளுக்கான 15 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காலியாக உள்ள இந்த 15 இடங்களுக்கு 11,000 பட்டதாரிகள் குவிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மத்திய பிரதேசத்தில் மட்டுமில்லாமல் உத்தரப்பிரதேசத்தில் இருந்தும் பலர் வந்தனர்.

பியூன், ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல், எம்.பி.ஏ, முனைவர் பட்டம் படித்தவர்கள் கூட காத்திருந்தது அம்மாநில வேலையின்மையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மத்திய பிரதேச முதல் சிவ்ராஜ் சிங் சவுஹான், ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் இச்சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது.

மத்திய பிரதேசத்தில் வேலை வாய்ப்பில்லாதோர் எண்ணிக்கை 32,57,136. பள்ளிக்கல்வித் துறையில் மட்டுமே 30,600 காலிப் பணியிடங்கள் உள்ளன. உள்துறையில் 9,388, சுகாதாரத் துறையில் 8,592, வருவாய்த் துறையில் 9,530 காலிப்பணியிடங்கள் உள்ளன.

அரசாங்கம் சமீபத்தில் அறிவித்த குறைந்த சம்பளமுடைய தெருவோர வியாபாரிகள் திட்டத்திற்கு 15 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் என்றும், இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 99,000 பேரில் 90 சதவீதம் பேர் பட்டதாரிகள் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 95 பேர் வேலை கிடைக்காமல் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்காமல் இளைஞர்களை பாஜக அரசு வீதி வீதியாக வேலை தேடி அலையவிடுகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.