அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சுகர்லேண்ட் பகுதியில் இந்தியாவை சேர்ந்த சீனிவாஸ் நாகிரேகந்தி (51), சாந்தி (46) தம்பதி வசித்து வந்தனர்.
 
சீனிவாஸ், மின்சார நிறுவனம் ஒன்றில் இயக்குனராகவும், சாந்தி மற்றொரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் புரோக்கிராமராகவும் பணியாற்றி வந்தனர்.
 
இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 21 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகன் டெக்சாஸ் பல்கலை கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை தம்பதி இருவரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் வீட்டில் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை ஆய்வு செய்தனர். சாந்திக்கு தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது.
 
படுக்கை அறையில் சீனிவாஸ் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.
 
அவர் அருகே துப்பாக்கி ஒன்று கிடந்தது. இது தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில் சாந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சீனிவாஸ், பின்னர் தன்னை தானே சுட்டுத் தற்கொலை செய்தது தெரிய வந்தது. மற்றொரு அறையில் மகள் தூங்கி கொண்டிருந்ததால் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.