அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

அதிமுகவில் உட்கட்சி தேர்தலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டாயம் நடத்தி முடிக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால் அதிமுக தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் கடந்த 1 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.

அதிமுக கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளை களைய, செயற்குழு கூடி கட்சி விதியில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் ஒரே வாக்கில் இணைந்து தேர்வு செய்வார்கள் என்று விதியில் திருத்தம் செய்யப்பட்டது.

திருத்தப்பட்ட கட்சி விதிகளின் அடிப்படையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வை மாற்றவோ, விதிகளை திருத்தவோ பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கட்சி விதிகளை மாற்றும் அதிகாரம் உள்ளவர்கள் என திருத்தப்பட்டது.

இதனையடுத்து டிசம்பர் 2 ஆம் தேதி அதிமுக உள்கட்சி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 7 ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும், இதற்கான மனுதாக்கல் 3 ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

முதல் நாளான நேற்று (3.12.2021) ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. மனுதாக்கல் செய்ய இன்று மாலை வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று (4.12.2021) காலை அதிமுக மூத்த நிர்வாகிகள் தலைமைக் கழகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் வந்தனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களது மனுவை தேர்தல் பொறுப்பாளர்களான பொன்னையனும், பொள்ளாச்சி ஜெயராமனும் பெற்றுக் கொண்டனர்.

இன்று மாலை மனுத்தாக்கல் முடியும் வரை பன்னீர்செல்வம், பழனிசாமி தவிர அதிமுக நிர்வாகிகள் வேறு யாரும் அந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கவில்லை. பன்னீர்செல்வத்துக்கும், பழனிசாமிக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாகும் வகையில் மாவட்ட கழக அமைப்புகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வேட்புமனுக்கள் நாளை (5.12.2021) பரிசீலனை செய்யப்படுகின்றன. அதற்கு அடுத்த நாள் 6 ஆம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். 7 ஆம் தேதி ஓட்டுப்பதிவு என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் போட்டியில்லாததால் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.

எனவே அதற்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்வதாக அறிவிக்கப்படுவார்கள். இதன் மூலம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியை ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமியும் தக்க வைத்துக்கொள்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து அதிமுக கிளைக் கழகங்களுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுதாக்கல் விரைவில் தொடங்குகிறது. அப்போது அதிமுக உள்கட்சி தேர்தல் பரபரப்பான சூழ்நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அதிமுக உள்கட்சி தேர்தல் முறைகேடாக நடக்கிறது. உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை ஆகவே தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக உள்கட்சி தேர்தலுக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இருப்பினும் முறைகேடு நடந்தால் தேர்தல் முடிவுக்கு தடைவிதிக்க நேரிடும் என எச்சரித்து ஓபிஎஸ், இபிஎஸ், பொன்னையன் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.