“அக்னி தேவி” படத்தின் கதையில், ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நான் நடிக்க மறுத்த நிலையில், படத்தை திரையிட தடை கோரி நடிகர் பாபி சிம்ஹா நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் இயக்குனர் மீது புகார் அளித்துள்ளார்.

தமிழில் சூதுகவ்வும், ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, சாமி 2 ஆகிய படங்களில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். தற்போது, பாபி சிம்ஹா நடிப்பில் இயக்குனர் ஜான் பால்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அக்னி தேவி. இப்படம் வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில், பாபி சிம்ஹாவுடன் இணைந்து சதீஷ், மதுபாலா, ரம்யா நம்பீசன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்திற்கு தடை விதிக்கக்கோரியும், இயக்குனர் மீதும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகரில், “கடந்த 2018ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான்பால்ராஜ் இயக்கத்தில் அக்னிதேவ் என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டேன். தொடர்ந்து 5 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆனால், நடிக்கும் போது எனக்கு தெரிந்துவிட்டது.

என்னிடம் சொன்ன கதை வேறு. இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் கதை வேறு. அதனால், இப்படத்தில் இருந்து நான் விலகிவிட்டேன். அதோடு, நான் நடித்த காட்சிகளை என்னிடம் காண்பிக்கச் சொன்னேன். இதனால், ஏற்பட்ட பிரச்சனையால் நான் படத்தில் நடிக்கவில்லை. இது தொடர்பாக கோவை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், வக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அக்னிதேவ் என்ற படத்தின் டைட்டிலை அக்னி தேவி என்று படக்குழுவினர் மாற்றிவிட்டனர். படமும், வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் நான் நடிக்கவே இல்லை. எனக்குப் பதிலாக டூப் மற்றும் கிராபிக்ஸ் செய்துள்ளனர். அப்படியிருந்த போது, நான் நடித்துள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, உடனடியாக இயக்குனர் ஜான்பால் ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாபி சிம்ஹா கூறியுள்ளார். இதன் காரணமாக, ஜான்பால் ராஜ் மீது 406, 420, 469, 470 (ஆள் மாற்றம், மோசடி, ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.