டெல்லியில் இதுவரை 2,098 சடலங்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்து மாநகராட்சி தலைவர்கள் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, உலக கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்துக்கு வந்துள்ள நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து பலமடங்கு அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது வரை 32,810-ஆக உள்ளது, அதே சமயத்தில் 984பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்ததாக டெல்லி அரசு ஓர் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.

இதற்கு முரணாக NDMC என்று அழைக்கப்படும் புது டெல்லி மாநகராட்சி மன்றம், கொரோனா தொற்றால் டெல்லியில் இதுவரை 2,098 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. டெல்லி தெற்கு மாநகராட்சியில் 1,080 பேர் வடக்கில் 976 பேர் கிழக்கில் 42 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் 984 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்ததாக டெல்லி அரசின் புள்ளி விவரம் கூறியுள்ள நிலையில் மாநகராட்சி தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. டெல்லி அரசு இதுபோன்ற மாறுபட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருவதால் டெல்லி மக்கள் மிகுந்த குழப்பத்திலும், அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

அதே சமயத்தில் கடந்த ஒருவார காலமாக தலைநகர் டெல்லி மட்டுமல்லாமல் அதனுடைய அண்டை மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ஹரியானா மாநிலங்களுடைய எல்லைப்பகுதி மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் டெல்லியில் மால்கள், வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடரந்து டெல்லி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு என்பது பலமடங்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் வருகின்ற 15ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கை நீட்டிக்க மாநில அதிகாரிகளுடன் முதல்வர் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தி உள்ளார். இதில் ஒருகட்டமாக நேற்றைய தினம் மத்திய அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து சுமார் அரைமணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க: டிஜிட்டல் மூலம் நாங்கள் பிரசாரம் செய்வதை உங்களால் தடுக்க முடியாது.. அமித்ஷா