2021, ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து உள்ளார்.

அரசியல் கட்சித்தொடங்கப்போவதாக கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்த ரஜினி, பின்னர், அதுகுறித்து திட்டவட்டமாக எதுவும் கூறவில்லை. இதனால் ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அவரது மக்கள் மன்றத்தினர் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து கடந்தவாரம் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினர். ஆனால் அரசியல் வருகை குறித்து எதுவும் முடிவெடுக்கவில்லை.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதிமதச் சார்பற்ற, ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்” என தெரிவித்து உள்ளார்.

ரஜினியின் திடீர் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறினாலும், தற்போதும் ரஜினி இறுதியான முடிவை அறிவிக்கவில்லை என்று ரஜினியின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி உள்ளது.

எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்- ரஜினி