மோடி என்ற பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்றம், கோடை விடுமுறைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் பிரச்சாரம் ஒன்றில் ராகுல் காந்தி பேசியதற்கு, குஜராத் மாநிலம் சூரத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில் புத்துயிர் பெற்றது.

இந்த அவதூறு வழக்கில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்த நிலையில் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து அரசு பங்களாவை காலி செய்ய ஒன்றிய பாஜக அரசு நோட்டீஸ் அனுப்பி, ராகுல் காந்தி வீட்டை காலி செய்தார்.

இந்த நீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளும் பாஜக அரசிற்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதன் விளைவாக, ஆளும் பாஜக அரசு செய்த உள்குத்து என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி
மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி கீதா கோபி இவ்வழக்கு விசாரணையில் இருந்து விலகினார்.

இதுதொடர்பான விசாரணை குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி ராகுல் காந்தி வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைக்கும் போது, அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் மக்களவை எம்.பி சீட்டை நிரந்தரமாக இழக்க நேரிடும். இது ராகுல் காந்திக்கும், அவர் சார்ந்த மக்களவை தொகுதிக்கும் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். வாய் வழி அவதூறு என்பது இயற்கையிலேயே அவ்வளவு தீவிரமான குற்றச் செயல்பாடு அல்ல.

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அதை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்காததால் எங்கள் தரப்பிற்கு பெரும் இழப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், ராகுல் காந்தியின் கோரிக்கைக்கு எதிர்க்கும் வகையில் கூடுதல் ஆவணங்களை புர்னேஷ் மோடியின் வழக்கறிஞர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இன்று (2.05.2023) விசாரணை நிறைவடைந்த நிலையில், ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த நீதிபதி, இறுதி தீர்ப்பு கோடை விடுமுறைக்கு பின்னர் வழங்கப்படும் என்று தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.