கேஜிஎஃப்- 2 பட பாடலின் இசையை அனுமதி இன்றி பயன்படுத்திய வழக்கில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் பாரத் ஜோடோ யாத்திரையின் ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ (இந்திய ஒற்றுமை பயணம்)’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி துவங்கிய இந்த பாதயாத்திரை கேரளா, கர்நாடகம் மாநிலங்களில் நடந்து முடிந்தது.

ராகுல்காந்தி தலைமையிலான இந்த பாதயாத்திரை தெலங்கானாவில் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவிற்குள் வந்துள்ளது. இதனிடையே, ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பாத்திரை தொடர்பான வீடியோ, புகைப்படங்கள், கருத்துக்களை வெளியிட ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் தனியே ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோல், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்தும் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடர்பான வீடியோக்கள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில், கர்நாடகாவில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை பயணத்தின் போது காங்கிரஸ், பாரத் ஜோடோ யாத்திரை ட்விட்டர் பக்கங்களில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த விடீயோவின் பின்னணி இசையில், கேஜிஎப்- 2 திரைப்பட பாடலின் இசை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கேஜிஎப்- 2 பட பாடலின் இசைக்கான காப்புரிமையை எம்ஆர்டி இசை நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், பாடலுக்கு நாங்கள் காப்புரிமை பெற்றுள்ள நிலையில் தங்களிடம் முன் அனுமதி பெறாமல் கேஜிஎப்-2 பட பாடலின் இசையை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியதாகவும், அது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு எம்ஆர்டி இசை நிறுவனம் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

இந்த புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் கீழ் 403, 565, 120 ஆகிய பிரிவுகள் மற்றும் 1957 ஆம் ஆண்டு காப்புரிமை சட்டம் 63 ஆகிய பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நேற்று (7.11.2022)பெங்களூரு வணிக நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, காப்புரிமை பெற்றுள்ள நிறுவனத்திடமிருந்து அனுமதி பெறாமல் அவர்களின் பாடலின் இசையை பயன்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சி மற்றும் பாரத் ஜோடோ யாத்திரையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவையடுத்து, காங்கிரஸ் மற்றும் இந்திய ஒற்றுமை யாத்திரை ட்விட்டர் கணக்குகள் விரைவில் முடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தை சட்ட ரீதியில் எதிர்கொள்வோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.