தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 50% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15% இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி திமுக, மதிமுக, அதிமுக, பாமக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியினர் சார்பில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதே கோரிக்கையுடன் தமிழக அரசின் சுகாதாரத்துறையும் வழக்கு தொடர்ந்தது.

இன்று இந்த வழக்கை விசாரித்த ஆர்.சுப்பையா,கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50% இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கக் கோரி வழக்கில் ஜூன் 22-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் மருத்துவ மேற்படிப்புக்காகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த கோரிக்கை தொடர்பாக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் சேர்த்து வரும் ஜூன் 22-ஆம் தேதி விசாரிக்கப்படும் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் வாசிக்க: 96 பணியிடங்களில் 5 பேர் மட்டுமே தமிழர்கள்..