விதிமீறல் கட்டிடங்களை அனுமதித்து விட்டு பின்னர் அவற்றை வரைமுறை செய்வதற்கு பதிலாக, நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தை திரும்பப் பெற்று விடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்த குடியிருப்பில் தரைதளம் மற்றும் முதல்மாடி உரிமையாளர் விஜயபாஸ்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விதிமீறல்களை கட்டுப்படுத்துவது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் மனுதாரருக்கு சொந்தமான தரைதளத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாக கூறி, குடியிருப்புக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த சீலை அகற்றக் கோரி விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ்பாபு அடங்கிய அமர்வு, மாநகராட்சி ஆணையரை ஆஜராக உத்தரவிட்ட பின், நடவடிக்கை எடுத்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் கட்டிடத்தை சீல் வைத்த போது இருந்த மாநகராட்சி அதிகாரிகள் யார் யார்? காவல் துறை அதிகாரிகள் யார் யார்? என்ற விவரங்களை நவம்பர் 7 ஆம் தேதி தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று (07.11.2022) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கட்டிடத்துக்கு சீல் வைத்த நேரத்தில் அங்கிருந்த மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட கட்டிடத்துக்கு சீல் வைப்பது என ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டு, அக்டோபர் 28 ஆம் தேதியே நோட்டீஸ் அனுப்பப்பட்டு விட்டது எனவும்,

ஆணையரை ஆஜராக உத்தரவிட்டதால் நடவடிக்கை எடுத்ததாக கூறுவது தவறு எனவும் மாநகராட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் நடைமுறைகளும் விளக்கப்பட்டிருந்தன.

அப்போது, நீதிபதிகள் சென்னையில் விஐபிகள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலையின் அருகில் விதிமீறல் கட்டிடங்கள் பல ஆண்டுகளாக இருப்பதாக சுட்டிக்காட்டினர். இந்த விதிமீறல் கட்டிடங்களை அனுமதித்து விட்டு, அவற்றை வரைமுறை செய்வதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு பதில், விருப்பம் போல் அவரவர் கட்டுமானங்களை மேற்கொள்ளும் வகையில் நகர் மற்றும் ஊரமைப்பு சட்டங்களை திரும்பப் பெற்று விடலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை பொறுத்தவரை, விதிமீறல்களை சரி செய்ய மனுதாரருக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுவதாக கூறி வழக்கை 31 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.