தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, கடந்த 15 நாட்களில் ரூ.100 உயர்ந்து, தற்போது ரூ.710 ஆக விற்பனை செய்யப்படுவது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி அமைத்தது முதல், இந்தியாவில் மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு ஆகிய காரணங்களை கூறி, இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

அதன்படி, டிசம்பர் 01 ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இதனால் ரூ.610 ஆக சிலிண்டர் விலை ரூ.660 ஆக விற்கப்பட்டு வந்தது. மேலும் வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை ரூ.1,293-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், இம்மாதத்தில் 2 வது முறையாக சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்து, தற்போது ரூ.710 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒரே மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.100 உயர்த்தப்பட்டு உள்ளது.

15 நாட்களில் ஒரேடியாக ரூ.100 உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்பதிவு செய்யும் போது பழைய விலையாக இருந்தாலும் புதிய விலைக்கே சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.37 உயர்ந்து ரூ.1,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் அதிரடியாக ரூ.50 உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை