தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அக்டோபர் 19 முதல் 21 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

இதன் காரணமாக வரும் 20ம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு தமிழகம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அரபிக்கடல், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை அக்டோபர் 19 முதல் 21 ஆம் தேதி வரை சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 18 ஆம் தேதி அன்று ஓரளவு மழையும் வானம் மேகமூட்டத்துடனும் இருக்கும். இது 19 முதல் வலுப்பெற்று கனமழையாக மாறும்.

குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.