ஜெயலலிதாவின் சொத்துக்கு அண்ணன் மகள் தீபா மற்றும் அவரது தம்பி தீபக் இருவரையும் 2-ம் நிலை வாரிசுகளாக அறிவித்தது. மேலும் ஜெயலலிதா இல்லத்தின் ஒருபகுதி நினைவு இல்லம், மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று தமிழக அரசு அவசரச்சட்டம் பிறப்பித்தது. அதன்படி, புரட்சித் தலைவி டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத் தலைவராக பன்னீர் செல்வமும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற எடப்பாடி அவசர சட்டம்

முன்னதாக மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்ளிட்ட ரூ. 913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் கடந்தாண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது தம்பி ஜெ.தீபக் ஆகியோரும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களும் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தனர்.

மேலும் தங்களை ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்கக் கோரி தீபாவும், தீபக்கும் தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு (மே-27) இன்று தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தது.

அதன்படி, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜெயலலிதா இல்லத்தின் ஒருபகுதியை நினைவு இல்லமாகவும், மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் ஜெயலலிதா சொத்துக்கு தீபா, தீபக் இருவரையும் 2-ம் நிலை வாரிசுகளாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கும் உரிமை உள்ளது. ஜெயலலிதாவின் சொத்துகளின் ஒரு பகுதிகளை கொண்டு அறக்கட்டளை அமைக்கலாம். இது தொடர்பாக 8 வார காலத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி உள்ளிட்ட இருவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் தீபா, தீபக் இருவருக்கும் பாதுகாப்பு வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.