மாணவி சோபியாவை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய என்று காவல்துறைக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்குப்பதிவு செய்து நவம்பர் 20ம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கடந்த செப்டம்பர் 3ம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அப்போது அவரது இருக்கையின் அருகே பெற்றோருடன் அமர்ந்திருந்த கனடாவில் உள்ள மாண்ட்ரியல் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி பயின்று வரும், தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் சாமியின் மகள் லூயிஸ் சோபியா(வயது23), தமிழிசையை பார்த்ததும், ’பாசிச பா.ஜ. ஒழிக’ என்று கோஷமிட்டதாக கூறப்படுகிறது.

இதருக்கு பதிலடியாக அன்றைய தினம் சோபியாவை பாஜக மாநில தலைவர் தமிழிசையும், அவரது கட்சி தொண்டர்களும் வழிமறித்து, அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில் தமிழிசை, தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியனிடம் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சோபியாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஆனால் மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி, அவரை நிபந்தனையின்றி ஜாமீனில் விடுதலை செய்தார்.

இது சம்மந்தமாக சோபியாவின் தகப்பனார் டாக்டர்.A.சாமி , புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யாமல் காலம் கடத்தி வந்ததினால் சோபியாவின் தகப்பனார் தூத்துக்குடி நடுவர் எண்.3 நீதிமன்றத்தில் தமிழிசை மற்றும் அவரது தொண்டர்கள் மீது இ.த.ச.341,294 (b), 506 ( 1 ) மற்றும் பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யும்படி மனு தாக்கல் செய்து இருந்தார்.

தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் 10 பேர் மீது சட்டப் பிரிவுகள் 341, 294(பி), 506 (1) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்ற இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார் மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி. இந்த வழக்கில் விசாரணையை அடுத்து இன்று, தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் பாஜக பொது செயலாளர் எச். ராஜன் மீது பதியபட்ட ஆறு வழக்குகள் மற்றம் அவர் நீதிமன்றத்தில் நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரியது மற்றும் இப்போது பாஜக தலைவர் மீது தொடரப்பட்ட வழக்கு நிகழ்வு பாஜக தரப்பை அதிர்ச்சிகுள்ளாக்கியது என்கிறார்கள்
பாஜகவினர் .