19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வந்தது. ஆன்டிகுவாவில் இன்று (6.2.2022) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 61 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தத்தளித்தது. இந்திய வீரர்கள் ராஜ் பவா, ரவி குமாரின் பந்து வீச்சில் தடுமாறிய இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ரிவ் 116 பந்தில் 95 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் ராஜ் பவா 5 விக்கெட்களையும், மற்றொரு பந்து வீச்சாளர் ரவி குமார் 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணியின் தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஹர்னூர் சிங் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.கேப்டன் யாஷ் துல் 17 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

எனினும் இந்திய வீரர்கள் ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, ராஜ்பாவா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதில் ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து ஆகியோர் அரைச்சதம் அடித்தனர். ராஜ்பாவா 35 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் அடித்தது. இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்த இந்தியா, ஐந்தாவது முறையாக ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பந்துவீச்சில் 5 விக்கெட்டும், பேட்டிங்கில் 35 ரன்களும் எடுத்த ராஜ் பவா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றிய ஒவ்வொரு வீரருக்கும் ரூ.40 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “முன்மாதிரியான செயல் திறனுக்காக ஒரு வீரருக்கு ரூ.40 லட்சமும், துணை ஊழியர்களுக்கு ரூ.25 லட்சமும் வெகுமதி அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஐசிசி உலகக்கோப்பையை 5-வது முறையாக வென்றுள்ள யாஷ்துல் தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 1000 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை பெற்ற இந்திய ஆண்கள் சீனியர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.