சிங்கமுத்து தன்னை தரக்குறைவாக பேசியதாக சிங்கமுத்து மற்றும் பேட்டியெடுத்த மனோபாலா ஆகியோர் மீது வடிவேலு புகார் அளித்த நிலையில், மனோபாலா மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிரபல இயக்குனரும் காமெடி நடிகருமான மனோபாலா வேஸ்ட் பேப்பர் என்ற யூடியூப் சேனல் துவங்கி நடத்தி வருகிறார். அதில் பல சினிமா துறை நட்சத்திரங்கள் உடன் பேசி அந்த நேர்காணல் வீடியோவை வெளியிட்டு வருகிறார் மனோபாலா.

சமீபத்தில் நடிகர் சிங்கமுத்துவை பேட்டி எடுத்திருந்தார் மனோபாலா. அந்த வீடியோவில் வடிவேலு பற்றி சிங்கமுத்து சில விஷயங்கள் பேசி இருந்தார். அதை பார்த்து கோபமான வடிவேலு நேற்று நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார்.

வடிவேலு தனது புகாரில், “நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்து பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ் அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக மனோபாலா வடிவேலுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஒரு யூடியூப் சேனலில் அவர் அளித்த பேட்டியில் தனக்கும் வடிவேலுக்கு முப்பது வருடம் நட்பு இருக்கிறது என்றும், அவர் ஏன் என் மீது நேரடியாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார் என தெரியவில்லை. பதில் கூறியவர் மீது தான் புகார் கூறவேண்டும், கேள்வி கேட்ட என் மீது எதற்கு புகார் கொடுத்தார்.

வடிவேலுவின் புகார் தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது என்றும், தான் இதுவரை சினிமாத் துறையில் நடுநிலையுடன் தான் செயல்பட்டு வருகிறேன். இருப்பினும் அவரது நட்பை நான் இழக்க விரும்பவில்லை, அதனால் மன்னிப்பு கேட்கிறேன் என மனோபாலா கூறியுள்ளார்.

தற்போது வடிவேலு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் நிலையில் அவர் விரைவில் மீண்டும் சினிமாவில் நடிப்பதை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருப்பவர்களில் தானும் ஒருவன் எனவும் விரைவில் வடிவேலு மீண்டும் சினிமாவில் களமிறங்கவேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார் மனோபாலா.

வடிவேலு அடுத்து கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தின் மூலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.