ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானது முதலே அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனால், மூன்றே நாட்களில் அதானி குழுமம் 5.3 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது முதலே இந்திய பங்குச்சந்தை தொடர் சரிவை சந்தித்து வருகின்றது. உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்த கௌதம் அதானியின் நிறுவன பங்குகள் ஒட்டுமொத்தமாக சரிவைச் சந்தித்தது பங்குச்சந்தை செயல்பாடுகளிலும் எதிரொலித்தது.

பங்குச்சந்தை ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் வணிகத்தைத் தொடங்குவதும், சிறிது நேரத்திலேயே அதானி குழுமத்தின் 7 நிறுவன பங்குகளும் வீழ்ச்சியால் சென்செக்ஸ் சரிவை சந்திப்பதும் கடந்த சில நாட்களாக வாடிக்கையாகிவிட்டது.

அதானி குழுமம் மட்டுமின்றி, கௌதம் அதானிக்கு சொந்தமான மற்ற நிறுவனங்களான ஏ.சி.சி. லிமிடெட், அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட், என்.டி.டி.வி. லிமிடெட் ஆகியவையும் பங்குச்சந்தையின் இந்தப் போக்கில் இருந்து தப்பவில்லை.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு, பங்குச்சந்தையில் வணிகம் நடந்த ஜனவரி 25, 27 மற்றும் 30 ஆகிய மூன்றே நாட்களில் மட்டும் அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.5.31 லட்சம் கோடி சரிந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. அதானிக்குச் சொந்தமான மற்ற நிறுவனங்களின் இழப்பையும் கணக்கில் கொண்டால், அவரது தொழில், வர்த்தக சாம்ராஜ்யத்தின் மதிப்பில் ரூ.5.6 லட்சம் கோடி ரூபாய் வீழ்ந்திருக்கிறது.

அதானி குழுமத்தின் மதிப்பு தொடர்ந்து சரிவதால், அதில் பெரும் பகுதியைத் தன் வசம் வைத்துள்ள கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் கணிசமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. இதனால், உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்கும் கீழே அவர் சரிந்துவிட்டதாக ப்ளூம்பெர்க் பட்டியல் கூறுகிறது.

11-வது இடத்தில் இருக்கும் கௌதம் அதானி தற்போதைய நிலை தொடர்ந்தால், வெகு விரைவில் ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை மற்றொரு இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடம் இழப்பார் என்று அது கணித்துள்ளது.

இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து அதானி குழுமம், “ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள பொய்யான கூற்றுகள் இந்தியா மீதான தாக்குதல் என்றும்,

மேலும் அந்த அறிக்கையில், “ஷார்ட் செல்லர் என்று ஒப்புக் கொண்டுள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம், நிதிச் சந்தையில் பொய்யான தோற்றத்தை உருவாக்கி எண்ணற்ற முதலீட்டாளர்களை நஷ்டப்படுத்தி அதன் மூலம் பெரும் ஆதாயத்தை அடைவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அதானி குழுமம் குற்றம் சாட்டியிருந்தது.

அதானி குழுமத்திற்கு உடனே பதிலளித்த ஹிண்டன்பர்க் நிறுவனம், “நாங்கள் எழுப்பியிருந்த 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு அதானி குழுமம் பதிலளிக்கவில்லை. இந்தியாவை திட்டமிட்டுக் கொள்ளையடிக்கையில் அந்நிறுவனம் தன் மீது தேசிய கொடியைப் போர்த்திக் கொண்டுள்ளது,” என்பது போன்ற கடுமையான வார்த்தைகளையும் ஹிண்டன்பர்க் நிறுவனம் பயன்படுத்தியிருந்தது.

அதானி குழுமம் விரிவான விளக்க அறிக்கை வெளியிட்ட பின்னரும்கூட பங்குச்சந்தையில் அதன் பங்குகள் சரிவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதானி குழுமத்தின் விளக்கம், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கப் போதுமானதாக இருக்கவில்லை என்பதையே நேற்றைய (திங்கட்கிழமை) பங்குச்சந்தை வர்த்தகமும் தெளிவுபடுத்தியது.

நேற்று மட்டும் அதானி குழுமம் தன் சந்தை மூலதன மதிப்பில் ரூ.1.4 லட்சம் கோடி ரூபாயை இழந்திருக்கிறது. அதானி குழும பங்குகள் தொடர் சரிவை சந்தித்தது மட்டுமின்றி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த வெள்ளியன்று வெளியிட்ட கூடுதல் பங்குகளும் முதலீட்டாளர்களின் வரவேற்பைப் பெறவில்லை.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.20,000 கோடி மூலதனம் திரட்ட, சுமார் 4.4 கோடி பங்குகளை வெளியிட்டுள்ள நிலையில், நேற்றைய பங்குச்சந்தை வர்த்தக முடிவில் வெறும் 3 சதவீத பங்குகளை வாங்க மட்டுமே விண்ணப்பங்கள் வந்துள்ளன.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் பங்குச்சந்தையில் நேரிட்ட சரிவை தடுத்த நிறுத்த அதானி குழுமம் பலவாறான உத்திகளைக் கைக்கொண்டு வரும் சூழலில்தான், அபுதாபியில் இருந்து உதவிக்கரங்கள் நீண்டுள்ளன.

அபுதாபி அரச குடும்பத்திற்கு நெருக்கமான இண்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி ரூ.3,260 கோடி ரூபாயை அதானி குழுமத்தில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

“அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் வலுவான அடிப்படை மீது எங்களுக்குள்ள நம்பிக்கையின் பேரில்தான் அதானி குழுமத்தில் முதலீடு செய்யும் ஆர்வம் வந்தது. நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சிக்கான சாத்தியங்களையும், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் ஆதாயம் தரும் வாய்ப்புகளையும் பார்க்கிறோம்,” என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சயீது பசார் ஷூயிப் தெரிவித்துள்ளார்.

இண்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி, அபுதாபியில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய நிறுவனம். இந்நிறுவனம் அதானி குழுமத்தில் ஏற்கெனவே கடந்த ஆண்டு ரூ.20,425 கோடியை முதலீடு செய்திருக்கிறது. தற்போது, அதானி எண்டர்பிரைசஸில் மேலும் முதலீடு செய்வதன் மூலம் அதானி குழுமத்தில் தனக்குள்ள பங்குகளை அந்நிறுவனம் மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளது.