இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய விண்வெளி மற்றும் அறிவியல் தொழிநுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் தீவுக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடலில் காணப்படும் 48 கிலோ மீட்டம் நீளம் கொண்ட மணற்திட்டுகள்தான் ‘ராமர் பாலம்’ என்று சொல்லப்படுகிறது.

இதனை இதிகாசத்தில் வரும் கடவுள் ராமரால் உருவாக்கப்பட்டது என்றும், இலங்கையில் இருக்கும் சீதாவை ராமர் மீட்க செல்லும்போது அவரது வானரப் படைகள் எல்லாம் சேர்ந்து இந்த பாலத்தை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்து நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் இதனை புனிதப் பகுதியாக கருதுகின்றனர். வால்மீகி எழுதிய ராமாயணத்திலும் ராமர் பாலம் குறித்த விவரங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்தப் பாலம் எப்படி உருவானது என்று அறிவியல்பூர்வமாக இதுவரையில் நிறுவப்படவில்லை.

இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பாஜக எம்.பி கார்த்திகேய சர்மா, இந்தியாவின் தொன்மையான வரலாற்றை பிரதிபலிக்கும் ராமர் சேது பாலத்தின் உண்மை தன்மையை அறிய ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஏதேனும் அறிவியல்பூர்வமான ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதா? இதுவரை எடுக்கப்பட்டதன் முடிவுகள் என்ன? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஒன்றிய அரசின் விண்வெளி மற்றும் அறிவியல் தொழிநுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் பதில் அளித்து பேசியபோது,”இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் ராமன் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியவில்லை. சுமார் 18,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால் ராமர் பாலம் பற்றிய தகவல்களை கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளது.

இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 56 கிலோ மீட்டர் தொலைவுக்கு ராமர் பாலம் இருந்ததாக கருதப்படுகிறது. ஆனால் கடலில் இருக்கும் சரியான கட்டமைப்பு ஆராய்வது கடினமாக உள்ளது. அந்தப் பகுதியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறியீடு இருப்பதாக இப்போதைக்கு சொல்ல முடியும்” என்று பதிலளித்தார்.

ராமர் பாலம் இருந்ததாக கூறி சேது கால்வாய் திட்டத்தை இந்துத்துவ அமைப்புகள் பல வருடங்களாக எதிர்த்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதுசமுத்திர கால்வாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

ஏனென்றால் வங்க கடலில் பயணிக்கும் கப்பல்கள் இலங்கையை சுற்றித்தான் சென்னை உள்ளிட்ட துறைமுகங்களுக்கு வந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. எனவே ராமர் பாலம் இருக்கும் பகுதியை ஆழப்படுத்தினால் சுமார் 400 கி.மீ கடல்வழி, சுமார் 30 மணிநேர பயண செலவு குறையும்.

அதோடு இந்த திட்டம் மூலம் தமிழ்நாட்டிற்கும் வருவாய் அதிகரிக்கும். எனவே இந்த திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசு முயன்று வந்தது. ஆனால் சிலர் இந்த பாலம் கடவுள் ராமரால் கட்டப்பட்டது என்றும், இவ்வாறு செய்வது இந்து மதத்தினரை அவமானப்படுத்தும் செயல் என்றும், இது இந்து நம்பிக்கையை உதாசீனப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும் சேதுசமுத்திரம் திட்டத்திற்கு எதிராகவும் கண்டனங்கள் எழுப்பினர். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் சர்ச்சையான நிலையில், அன்றைய முதல்வர், முத்தமிழறிஞர் கலைஞர் ராமர் என்ற ஒரு கடவுள் உண்மையிலே இருந்தாரா? அப்படி இருந்தால் அவர் பாலம் கட்ட எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்? என்பதற்கு சான்று வேண்டும் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே சேது சமுத்திர கால்வாய் திட்டம் தற்காலிமாக முடங்கிவிட்டது.

பல ஆண்டு காலமாக இந்த சர்ச்சை ஓயாமல் இருக்கும் நிலையில், தற்போது வரை அந்த பாலத்தை ராமர் தான் கட்டினாரா என்றும், அது எத்தனை ஆண்டுகள் பழமையானது என்றும் அறிவியல் ரீதியாக யாரும் நிரூபிக்கவில்லை.

இந்நிலையில் ஒன்றிய அரசின் பதில் நாடு முழுவதும் மீண்டும் பேச்சு பொருளாக மாறியுள்ளது. ராமர் பாலம் சர்ச்சை குறித்து சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பகல் கூறுகையில், “மக்களை தவறாக வழி நடத்தியதற்கு ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.

தற்போது ராமர் பக்தர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் அரசாங்கமே ராமர் பாலம் இருந்ததற்காக ஆதாரம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் கூறிவிட்டது. இப்போது அவர்களை எந்த பிரிவில் வைக்க வேண்டும்?. மக்களை தவறாக வழிநடத்தியதற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்” விமர்ச்சித்துள்ளார்.