மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டசபையில் இன்று (21.3.2022) தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்ட பாசன பகுதிகள் முழுவதும் காவிரி நீரை நம்பியே உள்ளன. ஆனால் காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு தராமல் தடுத்து வருகிறது.

இந்நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக எல்லை அருகே மேகதாது என்ற இடத்தில் மிக பிரமாண்டமான அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கி உள்ளது. இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் அறிவுறுத்தல்களை மீறி கர்நாடக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

இந்நிலையில், மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக சட்டசபையில் இன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார்.

அந்த தீர்மானத்தில், “காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும்,

தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட நிதி ஒதுக்குவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் கண்டனத்தை இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது.

கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை இம்மாமன்றம் வலியுறுத்துகிறது.

காவிரி நதிநீர் பிரச்சினை ஒரு நீண்ட கால பிரச்சினையாகும். இதற்கு தீர்வாக உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பு செயலாக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சினை இரு மாநிலங்களின் உணர்வு பூர்வமான பிரச்சினை ஆகும்.

ஆதலால் மேகதாதுவிலோ அல்லது காவிரி படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, மற்றப்படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.

உச்சநீதிமன்றத்தின் 18.5.2018 ஆணையின்படி, அதன் 16.2.2018 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பினை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படாத அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று ஆணையத்தை இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது” என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் பேசினார்கள். இறுதியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதன் பிறகு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இந்நிலையில், மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சட்டவிரோதமானது என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள பதிவில், “மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது சட்டவிரோதமானது. பிற மாநில உரிமைகளில் தலையிடுவது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது” என பதிவிட்டுள்ளார்.