இந்தியாவில் கடந்த 2008 முதல் டி20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 12-வது ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்றது.

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

தொடக்க நாளான இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட்கோலியும், பர்திவ் பட்டேலும் களம் இறங்கினர். சுழலில் ஹர்பஜன் சிங் கலக்கினார். தடுமாறிக் கொண்டிருந்த கோலி 6 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த மொயீன் அலியை 9 ரன்னில் திருப்பி அனுப்பினார்.

தொடர்ந்து டிவிலியர்சையம் 9 ரன்னில் அவுட்டாக்கினார். ஹெட்மயர் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 2 ரன்னுக்கு இம்ரான் சுழலில் பந்தில் சிக்கினார். இறுதியில் பெங்களூரு அணி 17.1 ஓவரில் 70 ரன் எடுத்து சுருண்டது.

சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், பிராவோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்

பின்னர் 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சனும், அம்பதி ராயுடும் நிதானமாக விளையாடினர். 10 பந்தை சந்தித்த வாட்சன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

அடுத்து வந்த ரெய்னா 19 ரன் மட்டுமே எடுத்தார். அடுத்ததாக களம் இறங்கிய ஜாதவ், ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். ராயுடு சிறப்பாக விளையாடி 28 ரன்கள் எடுக்க சென்னை அணி 17.4 ஓவரில் 71 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா முதல் வீரராக 5000 ரன்களை கடந்து ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய மைல் கல்லை எட்டி உள்ளார். பல்வேறு சர்வதேச வீரர்கள் விளையாடி வந்தாலும், ஒவ்வொரு சீசனிலும் சிறப்பாக விளையாடி அசத்தி வருகிறார் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது.